×

காதலனுடன் கருத்து வேறுபாடு 4வது மாடியில் இருந்து குதித்து நர்சிங் மாணவி தற்கொலை

கோவை: காதலனுடன் கருத்து வேறுபாடால் விரக்தியடைந்த கோவை கல்லூரி மாணவி விடுதியின் 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், மெய்யூர் பகுதியை சேர்ந்தவர் பபிஷா (18). இவர், கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு நர்சிங் படித்து வந்தார். கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்தார். இவர், நேற்று முன்தினம் விடுதியின் 4வது மாடியில் இருந்து திடீரென கீழே குதித்தார். இதில், படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் அவர், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், மாணவி கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். சமீபத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த மாணவி, விடுதி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post காதலனுடன் கருத்து வேறுபாடு 4வது மாடியில் இருந்து குதித்து நர்சிங் மாணவி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Babisha ,Meiyur, Kanyakumari district ,Saravanampatti ,
× RELATED காதல் தோல்வியால் விரக்தி நர்சிங் மாணவி தற்கொலை